மெசேஜஸ் நிரம்பி வழிவதால் என்னுடைய கைபேசியின் செய்யல்பாடோ இல்லை செயலாற்றலோ சிறுதும் குறைந்துவிட போவதில்லை, அதனால் தான் என்னமோ இதை பற்றி பெரிதாக கவலை படுவதும் இல்லை. என்னை பொறுத்தவரை கைபேசியில் இருக்கும் மெமரி ஸ்பேஸ் தான் தீர்மானிக்கிறது எப்பொழுது மெசேஜஸ் டெலிட் செய்வதென்று.
இதே நிலைமை தான் என்னுடைய ஈமெயில் அக்கௌன்ட்... கிட்டத்தட்ட மூனாயிரதிற்க்கும் மேற்பட்ட மடல்கள் குவிந்துள்ளன. படித்தவுடன் தேவையற்ற மடல்களை டெலிட் செய்வதில்லை. அதற்கென்று ஒரு நாள் ஒதுக்கி "clean up day" என்று சொல்லி வீட்டில் பந்தா காட்டிக்கொண்டு பழைய மடல்களை டெலிட் செய்து கொண்டிருப்பேன். இன்று மாலை தேநீர் அருந்திக்கொண்டே இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தோன்றிய விஷயம் தான் இது. கைப்பேசி , ஈமெயில் அக்கௌன்ட் போலவே என் நினைவகத்திலும் (memory) பல தேவைற்ற நிகழ்வுகள், நினைவுகளை எல்லாம் குப்பையை போன்று போட்டு வைத்துகொள்கிறேன்.
ரோடோரத்தில் எவனோ ஒருத்தன் என்னை பார்த்து கிண்டல் செய்திருக்கலாம், நான் பைக்கில் செல்லும் போது ஆட்டோ டிரைவர் ஏளனம் செய்திருக்கலாம், பஸ்ஸில் சில்லறை இல்லை என்பதற்காக பஸ் நடத்துனர் கடித்துக்கொண்டிருக்கலாம், எவனோ ஒருத்தன் பின்னாடி இருந்து கேலி பேச்சுக்கள் வீசி இருக்கலாம், பக்கத்தில் நிற்பவன் இம்சை படுத்தி இருக்கலாம்...ஏன்... வீட்டில் கூட ஏதோ ஒரு சந்தர்பத்தில் மாமியாரோ/கணவரோ கடுப்புடன் ஏதேனும் சொல்லி இருக்கலாம்.
இந்த விஷயங்களை என் மனதில் அசை போட்டுகொண்டு வீணாக மனவுளைச்சலுக்கு ஆளாகிறேன். பாதி நேரம் அவர்கள் சொல்லும் விஷயத்தை விட "அவள்/அவன் எப்படி சொல்லலாம்" என்ற எண்ணம் எழுவது தான் அதிகம். இந்த கோபம் கொப்பளித்து சிறிது நேரத்தில் தானகவே தணியும், என்றாலும் இதை எல்லாம் என்னுடைய நினைவகத்தில் வைத்துக்கொள்கிறேன். அவ்வப்போது இந்த நிகழ்சிகளை நினைவு கூர்ந்து தேவைற்ற கோபம் அடைகிறேன்.
எங்கோ படித்த ஞாபகம், சில நேரங்களில் நம் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் negative thoughts வாயிலாக பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று. உதாரணத்திற்கு, என்றோ ஒரு நாள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும், விடியல் நன்றாகவே விடியும், மற்ற நாட்கள் விட அன்றைய நாள் நல்லபடியாகவே இருக்கும் , இருப்பினும் ஏதோ ஒரு எண்ணம் தோன்றும், எதுவுமே சரி இல்லை போன்ற உணர்வு, எளிதாக உணர்ச்சிவசப்படுவது, ம்ச் "செத்துவிடலாம்" போல இருக்கு என்ற எண்ணம், ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது?, மத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களே, நாம் ஏன் அப்படி இருக்க முடியல?, என்னத்தே செய்து என்னத்தே ஆகப் போகுது, நான் இருக்கிற நிலைமைக்கு இதையெல்லாம் எங்கே செய்ய முடியும்? , சுய பச்சாதாபம், இப்படி சில... இவ்வாறாக தோன்றுவதற்கு என்ன காரணம், நம் நினைவகத்தில் நாம் குப்பையாக சேர்த்துவைத்திருக்கும் negative thoughts துளிர் விட்டு, கொடிகளாக நம் எண்ணங்களை சூழ்ந்து படர்ந்து கொண்டிருப்பதால் தான்.
இது வரை மொக்கை போட்டது போதும் இப்போ என்னதான் சொல்லவறீங்க என்று நீங்கள் முறைப்பது எனக்கு தெரியுது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான், உங்கள்குக்குள் ஒரு அளவுகோல்(sensor) வைத்துகொண்டு நீங்கள் சந்திக்கும் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷயங்களையும் செயலாக்கம் (processing) செய்து கெட்டவைகளை உங்கள் நினைவகத்தில் இருந்து அழித்துவிட்டு முடிந்தவரை நல்ல விஷயங்களை மட்டுமே வைத்துக்கொள்வதுதான்.
அலுவலகத்தில் யாரோ தன்னை காயப்படுத்திவிட்டார்கள் என்றோ தன்னை மேனேஜர் திட்டிவிட்டார் என்றோ காரணம் சொல்லிக்கொண்டு வேலை விட்டே நின்று விடுபவர்கள் உண்டு. இதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் மீது அவருக்கு இல்லாத தன்னம்பிக்கைதான்.
மற்றும் சிலர் , அவர்களால் செய்ய முடியாது என்று நாம் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடித்துவிடுவார். அது அவர்கள் மீது அவருக்கு இருக்கும் தனம்பிக்கைதான் முக்கிய காரணம். இவர்களிடம் இருக்கும் ஒரு விஷேஷதன்மை என்னவென்றால் தங்களை காயப்படுத்தும் அதிகாரத்தையோ உரிமையோ மற்றவர்களுக்கு கொடுப்பதே இல்லை. இவர்களின் இந்த விசேஷ செயல்பாட்டுக்கு காரணம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் கையாளும் ஒரே உத்தி தங்களுடைய நினைவகத்தில் இருக்கும் எண்ணங்களில் அவ்வபோது தேவையற்றவைகளை நீக்கிவிட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்து பரிசோதித்து அதனை செயல்படுத்துவது தான்.
முயற்சி செய்யுங்கள்..